கிருஷ்ணாயனம் :
கிருஷ்ணாயனம் மயா புரோக்த்தம் கிருஷ்ணஸ்ய கிருஷ்ணார்ப்பணம் |
ஸ்ரீகிருஷ்ண திவ்யாஸ்பதம் பவது கிருஷ்ணா நுகம்பாத் ஸ்மரம் ||
மண்ணின் பாரம் முடிக்க, சாது ஜனங்களைக் காக்க,
விண்ணினின்றும் பிறந்தான் தேவகிதன் மகனாய்,
கண்ணன் எனவளர்ந்தான் கோகுலத்தில் இருந்தான்,
அண்ணன் பலராமனுடனே யசோதை தன்சுதனாய்.
வந்தவசுரரைர்க் கொன்றான், கோபியர் அஞ்சி அதிசயிப்பான் ,
இந்திரன் தந்தமழையை குன்றமெடுத்து குடையாய்த் தடுத்தான்,
கந்தர்வ குமாரர் இருவர் ஆங்கு மரமாய் நிற்ற சாபம் தீர்த்தான் ,
மந்த யமுனை காளிந்தியில் காளியன்தலை நடம் பயின்றான்.
வனஜைசேர் பிரமன் பிள்ளைகள் ஒளிப்ப தோற்பித்தான்,
தனிமையிலே முழுநிலவில் பெண்கள் மனதை ஓர்ப்பித்தான்,
இனிமையிலே குழலூதி கன்று மாடுகளை சேர்ப்பித்தான்,
முனிபத்னிகள் திறம்காட்டி முனிவரவர் நேர்ப்பித்தான்.
மிக்கப்பெரும் மண்பாண்டத்து ததிபாண்டர்க்கு வீடளித்தான்
அக்கையில் சக்கரம் காட்டி நாவல்பழம் நேர்கொண்டான்,
தக்கத்தன்று எனதடுத்தும் இல்லம்புக்கு வெண்ணை உண்டான்,
மிக்கப்பெரும் வீதிநடுவே குடமாட்டு நடம் புரிந்தான்.
அக்குரூரவர் கனவு மெய்ப்பித்தான், மதுரைத் தடம்புக்கான்,
தக்கதென தன்கழுத்துக்கு உற்றமாலைப் பெற்றுகந்தான்,
அக்கூனி அதிசயிப்ப அவள்கோணல் போக்கி சாந்தணிந்தான்,
விக்கிரமங்கள் பலசெய்து தம்மக்கள் மனத்தமர்ந்தான்.
யானைமுன் நிறுத்தி மல்லரை மடுத்த கம்சனை வதைத்தான்,
ஏனைய சாகசம் அனைத்தும் தேவகிக்கு பின்நடத்தி மகிழ்த்தான்,
தானைப் பரிவாரம் திகழக் கிடப்ப உக்ரசேனன் மீட்டான்,
மானேய் மடநோக்கி பின்னை மணாளன் மாயம் இவையோதாம்?
பின்னை உருப்பிணி மணந்தான், பாமையை கொணர்ந்தான்,
தன்னை நலிந்த அபவாதம் ஒழிந்தான், ஜாம்பவதி புணர்ந்தான்,
இன்னும் பதினாறாம் ஆயிரம் தேவ கன்னியர் மீட்பனாய்
துன்னுபகை நரகனை வதைத்து இந்திரனைக் காத்தான்.
காத்தலும், அவன்மனைப் பூத்த கற்பகக் காவுதனை
நித்தமும் தன்மனைப் பூக்க வேண்டி நிச்சிது இச்சித்தாள்
சத்ய பாமையுமே, அதுநீடா வெகுண்ட இந்திரனும்
அத்திரம் கொண்டேக செருகறுந்தான் கண்ணனுமே!
உலப்பில் அரக்கன் கம்சனவன் மாவன் எண்ணாது
குலப்பெண் இருவரவர் நூலிழப்ப நொந்து கண்ணன்பால்
பலகாலும் படையெடுத்து இன்னல்பல விளைப்ப, பின்னும்
நலியாவகை நாடுவிட்டு ஒடி துவராபதி கண்டான்.
அக்ரபூஜை நேர்வது யார்க்கென சான்றோர் மொழிய
மூர்க்கன் சிசுபாலன் பொல்லாங்கு பேசி வசைபொழிந்தான்,
தீக்கொள் சக்கரம் அதுகொண்டு அவன்தலையை ஆங்கே
போக்கிய நம்கண்ணன் அல்லாதோர் இல்லை கண்ணே.
துரியன் விருப்பால் அகம்புகுந்து துருவாசர் பாரணம் கோர
சூரியன் தந்த கலயத்து அடிசில் இன்னும் வாராது என்றுணர்ந்த
நாரியவள் பாஞ்சாலி கூவியழைத்த குரலுக்கு ஓடிப்போந்தான்
ஓரத்து கீரை வாயிலிட்டு முனிவர் வயிறு பூரித்து ஓடச்செய்தான்.
குந்திதன் புதல்வர் சொந்தமாய் தூது முந்தி நடந்தான்,
வந்த எதிர்தல் அத்தனையும் அண்டாது கொண்டான்,
இந்த அத்தனையும் பாஞ்சாலி குழல்முடிப்பச் செய்தான்,
தந்தஅவள் பக்திக்கு ஈடுஇவை ஏதுமிலை எனநொந்தான்.
தேர்நடத்தி தேர்அழுத்தி தேர்விடுத்து போர்களத்து பேரளித்தான்
பார்த்தன் போல்வில் விஜயன்யார் என்றுஊர் பேச, நம்கண்ணன்
போர்முகத்து பாண்டவர்க்காய் கூர்த்தப்பட்டை ஏந்தலேன் என்ற
சீர்த்ததன் வாக்கு பொய்த்தனாய் பொல்லாங்கு தான்நேர்ந்தான்.
சூதுவாது பலசெய்து சுயோதனர் பத்தும்பத்தாய் மாய்த்தான்,
கீதை உரைசெய்தவன் அவனே உத்தரை மகனைக் காத்தான்,
மாதவன் தன்பெருமை பீஷ்மர் அவர்வாயில் மொழியதைத் தானும்
யாதுமறியா பேதை அதுவேபோல் ஆவல் மிகக் கேட்டான்.
கண்ணன் கள்ளம் கண்டு உத்தவர் சுத்தி வளையாதே எத்திறம் என்ன
கண்ணைப் புரட்டிக் கடத்த மேலுமொரு கீதை மொழிந்தான் பின்னை.
அண்ணல் அவனியில் வந்து தோன்றி தன்எண்ணம் எல்லாம் முடித்து
விண்ணில் மீளப்புக்கான் முன்னம் வாலி வேடன் கைஅம்பு தைய்த்து!
துவரையம் பதியும் கடல் போக, பாண்டவர்
ஐவர்தாம் ஈட்டிய அறத்தின்பால் சுவர்க்கம் ஏற ,
அவனியில் யாதவர் குலம் நசியக் கண்டனாய்
எவன் இவைச்செய்வான் அவனும் மீண்டனனே!
தன்னுடைச் சோதியுள் தேம்பாதே சென்று நாட்டில்
தன்னுடைக் கீதைமொழிப் பாதை ஈட்டிய மாட்டு
நன்நெறியை மீள மனிசர் உய்யக் காட்டுமாறு
மன்னுலகில் ஆழ்வார் போல்வாரைக் கூட்டினனே!
மங்களம் கண்ணனுக்கு, மரகத வண்ணனுக்கு,
மங்களம் மாலுக்கு, மாயனார் தாளுக்கு,
நங்கள் நாயக்கர்க்கு திருநிறை வாசன்சொன்ன,
மங்களம் எங்கணும், யாவர்க்கும் தங்கவே!
--கி. ஸ்ரீ. ஸ்ரீ.